வடமாகாண அரச தாதிய உத்தியோக சங்கத்தினால் எதிர்வரும் 29ஆம் திகதி கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வடமாகாண அரச தாதிய உத்தியோக சங்கத்தினால் மாகாண சுகாதார பணிப்பாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
TA/G/PSM/13/2016 ஆம் இலக்க 02.06.2017 ஆம் திகதிய சுற்றுநிரூபம் மூலம் வெளியிடப்பட்ட புதிய மேலதிக நேரக் கொடுப்பனவை நடைமுறைப்படுத்தாமை, மேலதிக நேர கொடுப்பனவின் நிலுவையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை.
மற்றும் தாதிய உத்தியோகத்தர்களது பதவி உயர்வின் போதான மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவையை வழங்காமை போன்ற கோரிக்கையை முன்வைத்தே வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாதிய உத்தியோகத்தர்களது கொடுப்பனவு சம்பந்தமான மற்றும் ஏனைய விடயங்களிலும் நடைமுறைப்படுத்தலில் தோல்வியடைந்த மாகாணமாக வடமாகாணமே உள்ளது என்பதனை தங்களுக்கு தெரிவிப்பதோடு இது வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களது தொழில்துறையை கடுமையாக பாதிக்கின்ற செயற்பாடாகவே உள்ளது.
இந்த ஒருநாள் வேலை நிறுத்தமானது 29.08.2017 மு.ப 7.00 தொடக்கம் 30.08.2017 மு.ப வரை நடைபெறும் என்பதனையும் நோயாளர்களினதும், பொதுமக்களினதும் நன்மை கருதி வேலை நிறுத்தத்தின் போது உயிர்காப்பு நடவடிக்கைக்கான அவசர சிகிச்சைக்கு மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
இவ் வேலை நிறுத்தத்தால் நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும் வடமாகாணசபை நிர்வாகமுமே முழுமையான பொறுப்பு என்பதனையும் அறியத்தருவதாக மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.