விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற அவசியம் இந்தியாவுக்கு இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகளே படுகொலை செய்ததாக கூறுகின்றீர்கள். இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளித்ததாகவும் கூறுகின்றீர்கள், அந்த காலப்பகுதியில் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் கட்டுப்பாட்டுக்குள்ளே பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது.
அவ்வாறாயின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது கோபத்தினை இலங்கை இராணுவத்தை பயன்படுத்தி இந்தியா பழி தீர்த்துக் கொண்டதா?” என கோத்தபாய ராஜபக்சவிடம் அந்த ஊடகம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “எமது படையினர் பழி தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறு கூறவும் முடியாது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு வாரங்களில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியில் நானும் இடம்பெற்றிருந்தேன்.
இந்த விஜயத்தின் போது எம்.கே.நாராயணனுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் அவருடன் கலந்துரையாடியிருந்தேன்.
இதன்போது கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையை ஆட்சி செய்தவர்கள் படை நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முயற்சித்த போதிலும் அவை முடியாமல் போனது.
அதே படையினர் தற்போதும் இருக்கின்ற நிலையில் படை நடவடிக்கைகள் மூலமான முயற்சி நிச்சயம் வெற்றியளிக்காது. அத்துடன் பேச்சுவார்த்தை மூலமும் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
ஆகவே ஏதாவது புதிய முறையொன்றை கண்டறியும்படி எம்.கே.நாராயணன் கூறியிருந்தார். அத்துடன், விடுதலைப் புலிகளை தோற்றகடிக்க வேண்டும் என்ற அவசியமும் இந்தியாவுக்கு இருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பு இருப்பதால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் கலாச்சாரம் சீரழிக்கப்படுகின்றது. அமைதியற்ற சூழல் தொடர்கின்றது.
ஆகவே, தமிழ் மக்களுக்கு சற்றும் ஒவ்வாத அமைப்பாகவே விடுதலைப் புலிகளை இந்தியா கருதியதாக கோத்தபாய ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.