பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கவே நாங்கள் யுத்தத்தை செய்தோம். ஆதாரங்கள் இல்லாமல் இராணுவத் தளபதிகள் மீது போர்க்குற்றங்களைச் சுமத்த முடியாது. யுத்தத்தின் போது இடம்பெற்ற உயிரிழப்புகள் அனைத்தும் படுகொலை என்று எடுத்துக் கொள்ள முடியாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சர்வதேச நீதிமன்றில் முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேஸிலுக்கான தற்போதைய இலங்கை அரசின் தூதுவருமான ஜகத் ஜயசூரிய மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டு வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
விசேடமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காணாமல்போனோர், மனிதப் படுகொலை, கொலை, சித்திரவதை, துஷ்பிரயோகம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இலங்கை அரசு தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துரைத்துள்ளது.
ஆனால், ஆதாரங்கள் இல்லாமல் யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக இராணுவத் தளபதிகள் மீது பொய்யான குற்றஞ்சாட்டுகளை சுமத்த முடியாது.
யுத்தத்தின் போது இடம்பெற்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளும் கொலை என்று நினைக்கின்றனர். அரசு என்ற ரீதியில் அவ்வாறான நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை.
நாடு என்ற அடிப்படையில் தீர்மானம் எடுத்து தீவிரவாதத்தைத் தோற்கடிக்கவே நாங்கள் யுத்தத்துக்குச் சென்றோம். அதில் நாங்கள் வெற்றி கொண்டோம் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.