ஜேர்மனியில் அகதிகள் தொடர்பில் தவறான தகவல்களை சமூக விரோதிகளால் பரப்பப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜேர்மனியில் அகதிகள் தொடர்பில் புரளிகள் பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வெளிவிவகார அமைச்சகம் புதிய இணைய பக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
RumoursAboutGermany.info என்ற இணைய பக்கத்தில் ஜேர்மனியில் அகதிகள் தொடர்பில் தற்போதுள்ள சூழல் குறித்து விளக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி அகதிகளுக்கான புகலிடம் என சமூக விரோதிகளால் பரப்பப்படுவதால் மக்கள் உடமைகளை விற்றும் ஜேர்மனி நோக்கி படையெடுப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக மட்டும் 800,000 இடங்களை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுவதும் புரளி என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சகம், அகதிகள் தொடர்பில் எந்த நாட்டவருக்கும் ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை எனவும், விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரையும் தகுதியின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படுவதாகவும் அமைச்சகம் குறித்த இணைய பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஜேர்மனியில் அகதிகளாக செல்பவர்களுக்கு 2000 யூரோ இலவசமாக வழங்கப்படுவதாகவும், பின்னர் வீடு ஒன்று வழங்கப்படுவதாகவும் கூறப்படுவது புரளி எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் குடியிருக்க விருப்பமில்லாதவர்களுக்கு கனடா விசா வழங்கப்படும் என புரளிப்பரப்படுவதையும் அந்த இணைய பக்கத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணைய பக்கமானது பல்வேறு மொழிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.