ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் அழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் கடந்த காலங்களில் பல எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவ்வாறு அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் தொண்டமானின் பெயரை பொறிக்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரித்தானியரின் காலணித்துவ காலப்பகுதிக்கு பின் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றி வந்த தலைவரான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை எவராலும் அழிக்க முடியாது எனவும மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் எங்கெல்லாம் இவரின் பெயர் அழிக்கப்பட்டுள்ளதோ அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அவரின் பெயரை மீண்டும் புதுப்பிக்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
மேலும், நாட்டிற்கு வெளிநாட்டு பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் மலையக மக்களின் உழைப்பை கடந்த காலங்களில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் சூறையாடி வந்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
உழைப்பின் ஊடான ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் இவ்வாறான நிர்வாகத்தினர் இம்மக்களுடைய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறைக் கொள்ளவில்லை என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன
இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே தமது குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளார்.