நாட்டில் இராணுவத்தினரால் தற்போது நடத்தப்படும் அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் இலங்கை குறித்த பரிந்துரைகள் நேற்று வெளியிடப்பட்டன.
குறித்த பரிந்துரைகளிலே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முழுசுயாதீனமாக இயங்கும் வகையில் காணாமல் போனோர் அலுவலகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலங்களில் சிறுவர்களாக இருந்தவர்கள் மற்றும் இன்னும் காணாமல் போயுள்ளவர்கள் ஆகியோர் தொடர்பாக உரிய அவதானத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழு கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம்; பெப்ரவரி மாதம் 2ம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெற்றது.
குறித்த அமர்வின் போது இலங்கை, ஸ்பெயின் உட்பட எட்டு நாடுகளின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.