கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தின் அமைதியை தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் கண்டி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளின் பாதுகாப்புக்காக காவற்துறையினர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகால சட்டத்தின் கீழ் அவர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் வீடுகள், வணக்கஸ்தலங்கள் ஆகியவற்றிட்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 71 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் தரவுகளை சேரிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பீ ஹிட்டிசேகர தெரிவித்துள்ளார்.