கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ் இதுவரை பயன்பாட்டில் இல்லாத புதிய வகை விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவருடைய கிட்டிகாவ்க் நிறுவனமும், பிறிதொரு நிறுவனமும் பங்குதாரராக இணைந்து சிபீர் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இதன் மூலம் இந்த விமானத்தை தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை 2 வகை விமானங்கள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விமானம் தரையில் தனிநபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போல ஆகாயத்தில் ஓட்டிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்றொரு விமானம் 2 பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்கனவே உள்ள விமானத்தின் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 2 பக்கமும் பக்கவாட்டுகளில் 12 சிறிய விசிறி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானில் பறந்து படம்பிடிக்கும் கேமரா விமானம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த விமானத்திற்கு கோரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த விமானம் ஏற்கனவே வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளது. இதில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். இருக்கும் இடத்தில் இருந்தே ஹெலிகாப்டர் போல மேல்நோக்கி எழுந்து செல்லும்,
அதேபோல செங்குத்தாக கீழே இறங்க முடியும்.இந்த விமானத்தை ஏர்டாக்சியாக பயன்படுத்த அந்த நிறுவனம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.
தற்போது நியூசிலாந்தில் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அரசு அனுமதித்ததைத் தொடர்ந்து அங்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
இந்த விமானம் கம்ப்யூட்டர் மூலம் ஆளில்லாமல் இயக்கப்படும். விமானத்தில் கோளாறு ஏற்பட்டாலோ, வேறு ஆபத்து ஏற்பட்டாலோ தானாக விமானத்தில் பாராசூட் விரிந்து பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் பறக்கும் என்றும், 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 3000 அடி உயரத்தில் பறக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.