திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவில் உள்ள காந்தி நகர் கிராமத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் அசிட் வீச்சு சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரி பொது மக்கள் நேற்று (01) இரவு 9.00 மணியளவில் அனுராதபுர சந்தை – கண்டி பிரதான வீதியில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் தனது வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்ட முற்சக்கர வண்டியின் கண்ணாடி சேதமாக்கப்பட்டது தொடர்பில் நியாயம் கேட்டவர் மீது. அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்குவதற்காக வாள் மற்றும் கொட்டன்களுடன் வந்த சிலர் தமது வீட்டை சேதப்படுத்தியதுடன் தமது கணவரை தாக்குவதற்காக தேடியதாக அவ் வீட்டின் பெண் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடிய அக்கிராம மக்கள் அவர்களில் ஒருவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்தனர்.
அவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற போதும் பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்கள் அன்று மாலையோ மறு நாளோ மீண்டும் அப்பகுதிகளில் உலாவுவதை கண்டுள்ள மக்கள் பொலிஸாரின் மீது நம்பிக்கை இழந்து ஊடகங்கள் மூலம் இப்பிரச்சினையை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் கவனத்திற்க கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் சில இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த உப்புவெளி பொலிஸார், உடனடியாக தாம் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாகவும் வீதியை விட்டுச் கலைந்து செல்லுமாறும் கோரினார். எனினும் அதற்கு கிராமத்தினர் நாளை (இன்று) (02) மாலை 5 மணிக்கு முன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாதவிடத்து தாம் மீண்டும் பாரியளவிலான ஒரு போராட்டத்தினை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் தொடர்ச்சியான போதைப் பொருள் பாவனை, வாள் வெட்டுச் சம்பவங்கள், அசிட் வீச்சு, தங்கச் சங்கிலி வழிப்பறி போன்ற சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
(திருமலை நிருபர் க.சூர்யா)