பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தன்னை ஆட்டமிழக்கச் செய்த வீரருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணித் தலைவர் கோஹ்லி பரிசாக அளித்துள்ளார்.
கடந்த 8-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் ராணா வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் டிவில்லியர்ஸ் 44 ரன்களில் ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதே ஓவரின் அடுத்த பந்தில் கோஹ்லி 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஆர்கேசிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தது ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அது பெங்களூரு அணிக்கு பாதகமாகவும் கொல்கொத்தா அணிக்கு சாதகமாகவும் அமைந்தது.
காரணம் பெங்களூரு அணியின் தலைசிறந்த இருவரையும் ராணா ஆட்டமிழக்கச் செய்தது கொல்கத்தாவுக்கு வெற்றியை எளிதாக்கியது.
அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ராணா 34 ரன்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிதிஷ் ராணாவை பாராட்டும் விதமாக அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பெங்களூரு அணித் தலைவர் கோஹ்லி பரிசாக அளித்துள்ளார்..
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி, டிவில்லியர்ஸ் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்கச் செய்தேன். இதைப் பாராட்டி கோஹ்லி, அண்ணா எனக்கு புதிய பேட் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.
ஒருவிளையாட்டில் சிறப்பாக இருப்பவர்கள் மூலம் நாம் வாழ்த்தப்படும்போது, நாம் செய்வது சரியாக இருக்கிறது என்று அர்த்தம். எனக்கு பேட் பரிசளித்த கோஹ்லி அண்ணாவுக்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் நித்திஷ் ரானா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.