திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் வர்த்தத்துடன் தொடர்புடைய கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
குறித்த கைதிகளின் 3,000க்கும் அதிக தொலைபேசி உரையாடல் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவற்றில் சர்வதேச நாடுகளுக்கான தொடர்பாடலும் அடங்குகின்றன. இந்தியா, டுபாய், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுடன், கைதிகள் தொடர்புகளைப் பேணியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலி, வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளே இவ்வாறு சர்வதேச நாடுகளிலுள்ள குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளனர்.
குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை முன்னெடுப்பதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.