பொதுஜன ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் சற்று முன்னர் ஜனாதிபதி மாளிகையில் நிறைவடைந்தது. இதில் 102 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், பிரதமரை ஏன் பதவி நீக்கினேன் என்பது குறித்து மைத்திரிபால நீண்ட விளக்கமளித்தார். பிரதமருக்கும் தனக்குமிடையில் கருத்து வேறுபாடு அதிகரித்தது, இருவரும் வேறுவேறு கொள்கைகளுடன் இருந்தது, ஜனாதிபதிக்கு எதிரான கொலை முயற்சியை அசட்டையாக கையாண்டது என நீண்ட குற்றப்பத்திரத்தை ஜனாதிபதி சுமத்தினார்.
“இந்த இடத்தில் கூடியுள்ள அனைவரும், ஒரே கட்சி, ஒரே கூட்டணியென்ற அடிப்படையில் ஒற்றுமையாக முன் செல்ல வேண்டும்“ என ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
பின்னர் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச- “கதிரைகள்தான் மாறியுள்ளன. நான் இருந்த இடத்தில் ஜனாதிபதி (மைத்திரி), அவர் இருந்த இடத்தில் நான் இருக்கிறேன். ஆனால் நமது கட்சியும், கொள்கையும் மாறவில்லை. அதனால் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு, எதிர்காலத்தை வென்றெடுப்போம்“ என மஹிந்த கூறினார்.
இதன்போது, தமது கூட்டணிக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவிருப்பதாக மஹிந்த அடிக்கடி குறிப்பிட்டார்.
நாளை தினம் நாட்டு மக்களிற்கு ஜனாதிபதி உரையாற்றவிருந்தார். அது நாளை மறுதினமாக தள்ளிவைக்கப்பட்டது. நாளை மறுநாள் திங்கட் கிழமை ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு உரையாற்றுவார்.
உடனடியாக சிறி அமைச்சரவை ஒன்றை அமைக்கும் யோசனையை, ஐ.தே.கவிலிருந்து தாவிய ஆனந்த அளுத்கமக முன்வைக்க, மஹிந்த அமரவீர அதை வழிமொழிந்தார். வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை பதவியேற்கும்.