தொடர்ச்சியாக மத ரீதியிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களை பிளவுபடுத்தி வருகிற பாஜகவிடமிருந்து தேசத்தை மீட்டு மதச்சார்பற்ற நல்லிணக்க பாதையில் கொண்டுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டுமென கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் பாஜக மத்திய அரசை ஆதரித்து வந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறியதுடன், நாடாளுமன்றத்திலும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பினை கொண்டுவந்தது.
சந்திரபாபு நாயுடுவின் இந்த நடவடிக்கைகளால் கடுமையான அதிர்ச்சியடைந்து மோடி – அமித்ஷா தரப்பு. இந்த நிலையில், பாஜகவை ஆட்சியிலிருந்து நீக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் சந்திரபாபு.
காங்கிரஸ் தலைவர் ராகுல், மம்தா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துள்ள அவர் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்.
அந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி அமையும் என கருதப்படும் நிலையில், ஆட்டுமந்தைகள் தான் கூட்டமாக வருமெனவும், அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும் ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழிசை.