2006ம் ஆண்டு மத்திய அரசின் சுற்று நிரூபத்திற்கு அமைய நோயாளர் பகுதியில் கமரா வசதிகளுடன் கூடிய கைத் தொலைபேசிகள் பயன்படுத்த முடியாது என்பதனையே நாம் நடைமுறை படுத்துகின்றோம்.
என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் , தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரம் சிமாட் வகை கைத் தொலைபேசிகள் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வைத்தியசாலையில் பணியாற்றும் பணிப்பாளராகிய நான் உட்பட நோயாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவே நியமிக்கப்பட்டுள்ளோம்.
அந்த வகையில் நோயாளர் விடுதிகளில் பணிப்பாளர் உட்பட எவருமே சிமாட் வகை கைத் தொலைபேசிகளை பயன் படுத்த முடியாது என்பது மத்திய சுகாதார அமைச்சர் 2006ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட சுற்று நிரூபம் சொல்கின்றது.
அதனையே தற்போது நாம் நடைமுறைப் படுத்துகின்றோம்
அதேநேரம் நோயாளர்களுடன் நேரடி தொடர்புடைய கடமைக்கு தொடர்பான எவருமே பயன்படுத்த முடியாது எனக் கூறியுள்ளோம். இதில் எந்த தராதர பாகுபாடும் கிடையாது. என்றார்.
இதேவேளை, குறித்த வைத்தியசாலையில் ஸ்மாட் தொலைபேசி அல்லாத சம்சூங் வகை தொலை பேசிகள் சுமார் 3000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
மேலும், விதிவிலக்காக வைத்தியர்கள் மட்டும் இந்நடவடிக்கை தொடர்பாக மாற்றங்கள் எதனையும் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. என தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் ஒன்று அனைத்து வைத்தியர்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சாதரண தொலைபேசி ஒன்றையே இதுவரை காலமும் தான் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கும் வைத்தியர் ஒருவர் மூலம் இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பலரின் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன களவாடப்பட்டமை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் இதுவரை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் பாகுபாடுகள் நிலவுவதாகவும் முறைப்பாடுகள் பல கிடைத்துள்ளன.
எனவே, வைத்தியசாலை பணிப்பாளர் இது தொடர்பான அடிமட்ட ஊழியர்கள் விடயத்திலும் கொஞ்சம் கவனம் எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சார்பாக எமது செய்திப்பிரிவு வேண்டி நிற்கின்றது.