கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் ஊடகங்கள் கறுப்பு ஊடகங்களாகவே செயற்பட்டதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு நட்டஈடு வழங்க தயாரா என பிரதமர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில், நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமைச்சரவை தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்படாத பெயர்கள் அடங்கிய கடிதம் ஊடகங்களில் வெளிவந்தன. வேண்டுமென்றால் அந்த கடிதத்தை அனுப்புகிறேன்.
குறிப்பாக விஜித் விஜயமுனி சொய்சாவின் பெயர் அங்கிருந்தது. அதற்காக அவர் ஒவ்வொரு ஊடகம் மீதும் வழக்கு தொடர்ந்தால் மில்லியன் கணக்கில் அவருக்கு நட்டஈடு கிடைக்கும். அதற்கு தயாரா என ஊடகங்களை கேட்கின்றேன்.
அந்த கடிதம் தொடர்பில் ஊடகங்கள் என்னிடம் கேட்கவில்லை. எமது அலுவலகத்துடன் தொடர்புகொண்டு கேட்கவில்லை. கடந்த ஒக்டோபர் 26இன் பின்னர் ஊடகங்கள் கறுப்பு ஊடகங்களாகவே செயற்பட்டன” எனத் தெரிவித்தார்.