தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கைதுசெய்யப்பட்ட அவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விஷால், “செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தேன். தவறு செய்தவர்களின் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை ஆனால் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதித்துறையை நான் நம்புகிறேன். நீதிமன்றம் சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.
சங்கத்தில் கணக்கு கேட்க வேண்டும் என்றால் முறையாக கேட்க வேண்டும். அதற்கென தனி விதி உள்ளது. நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி கொடுக்கப்பட்டுவருகிறது, அதற்கான கணக்கும் உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லாதவர்கள் எங்கள் மீது முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர். 7 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் பொதுக்குழுவை கூட்டவில்லை. வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பட வெளியீட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஏ.எல்.அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் உள்ளிட்ட சுமார் 50 பேர் திரண்டனர். அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.
இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றதாக நடிகர் விஷால் நேற்று காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.