21/4 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையினால், பெரும் அரசியல் பூகம்பம் ஒன்று வெடிக்கக் கூடிய நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது,
தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு கடந்த 29ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது. தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சமூகமளிக்காததாலும், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் வெளிநாடு சென்றிருந்ததாலும் இந்த விசாரணைகளில் பங்கேற்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையிலான தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இந்த விசாரணைகளின் முதல் நாள் அமர்வை நடத்தியிருந்தனர்.
பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக தெரிவுக்குழு விசாரணைகள் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சபாநாயகர் அனுமதி அளித்திருந்தார்.
முதலில் தற்போதைய பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கோட்டேகொடவும் இரண்டாவதாக, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸூம் சாட்சியம் அளித்திருக்கின்றனர்.
ஆனால், விசாரணைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதே, அரச தொலைக்காட்சியின் நேரலை நிறுத்தப்பட்டு விட்டது. ஜனாதிபதியின் தலையீடு அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், விசாரணைகளில் வெளியிடப்பட்ட பல தகவல்கள் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தன.
தெரிவுக்குழு விசாரணைகளில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டிருந்த ஊடகங்களின் மூலம், ஜெனரல் சாந்த கோட்டேகொட மற்றும் சிசிர மெண்டிஸ் ஆகியோரின் சாட்சியங்கள் ஊடகங்களில் பகிரங்கமாக வெளியாகியுள்ளன.
இருவரது சாட்சியங்களும் பாதுகாப்பு விடயத்தில் எந்தளவுக்குப் பாரதூரமான கவனயீனங்கள் இருந்துள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கின்றன.
இதற்குப் பின்னர் தான் வெடித்துள்ளது சிக்கல். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில், அவரது ஊடகப் பிரிவினால் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அதுபோலவே, இந்த தெரிவுக் குழுவை புறக்கணிக்கப் போவதாக அதில் இடம்பெற முடியாது என்று கூறியிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இந்த தெரிவுக்குழுவினால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று புலம்பத் தொடங்கியிருக்கின்றன.
தெரிவுக்குழுவின் முதல் நாள் விசாரணைகளில் வெளியாகிய தகவல்களே பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தான், அடுத்தடுத்த கட்டங்களில் எங்கெல்லாம் இருந்து ‘அரசியல் குண்டுகள்’ வெடிக்கப் போகின்றனவோ என்ற பதற்றம் அரசியல் மட்டங்களில் தொற்றிக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கோட்டேகொடவின் சாட்சியத்தில், புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருக்கவில்லை என்ற விடயத்தைக் கூறியிருக்கிறார்.
அதுபோலவே, சிசிர மெண்டிஸின் சாட்சியத்தில், புலனாய்வுத் தகவல்கள் உரிய தரப்பினரால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படவில்லை என்பதையும் கூறியிருக்கிறார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து புலனாய்வுப் பிரிவை அரசாங்கம் பலவீனப்படுத்தி விட்டதாக மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் பலரும் குண்டுவெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னரே, குற்றம்சாட்டி வந்தனர்.
21/4 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்ததால் தான், தாக்குதல்களை தடுக்க முடியாமல் போனது என்று கோத்தாபய ராஜபக் ஷ, மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஏன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீதான சட்ட நடவடிக்கைகளால் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டதாக கூறியிருந்தார்.
ஆனால், பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட அதற்கு முரணான சாட்சியத்தை அளித்திருக்கிறார். அவர் முன்னர் இராணுவத் தளபதியாக பதவியில் இருந்தவர்.
இராணுவப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டதால், அரச புலனாய்வு சேவைகள் பலவீனப்பட்டு விடவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
அத்துடன், இலங்கையில் அடிப்படைவாதக் குழுக்கள் பற்றிய எச்சரிக்கைகள் 2014இலேயே கிடைத்திருந்தது என்றும் அப்போதே, அந்த அமைப்புகளை தடை செய்திருந்தால், தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவுகள் பலவீனமான நிலையில் இல்லை என்ற பாதுகாப்புச் செயலரின் சாட்சியம், மஹிந்த தரப்புக்கு மாத்திரமன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், கூட சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
2014ஆம் ஆண்டில் அடிப்படைவாதக் குழுக்கள் பற்றிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போது, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமே பதவியில் இருந்தது.
கோத்தாபய ராஜபக் ஷவும் கூட, தமக்கு தகவல்கள் கிடைத்திருந்தன, அதற்கேற்றவாறு புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தினோம், அரபு மொழி தெரிந்தவர்களை உள்ளீர்த்தோம் என்றெல்லாம் கூறியிருந்தார்.
ஆனாலும், ஜெனரல் கொட்டேகொட கூறியது போல, ஏன் அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி உள்ளது.
அடுத்து, தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் சிசிர மெண்டிசின், சாட்சியமும் பாதுகாப்புத் துறையில் உள்ள பல ஓட்டைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.
தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் ஒழுங்கின்றி நடத்தப்பட்டது குறித்து அவர் தகவல் வெளியிட்டிருக்கிறார். 21/4 தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர், பெப்ரவரி 19ஆம் திகதியே கடைசியாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்குப் பின்னர், கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக் ஷ, இரண்டு மாதங்களாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்படாதது பெரிய தவறு என்றும், எல்லாமே இலகுவாக கிடைத்து விட்டது என்ற அலட்சியத்தினாலேயே ஜனாதிபதியும் அக்கறையின்றி இருந்து விட்டார் என அவர் சாடியிருக்கிறார்.
போர்க்காலத்தில் வாரம் ஒருமுறை தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்படும் வழக்கம் இருந்தது அதற்குப் பின்னர், தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தை நடத்துவதற்காக ஒரு கிரமமான கால எல்லையை வகுப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆர்வம் காட்டவில்லை என்பது வெளிப்படையாகியுள்ளது.
சிசிர மெண்டிஸ் அளித்துள்ள சாட்சியத்தின்படி, கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி, 5, பெப்ரவரி 19, மார்ச் 05, மே 02, ஜூலை 10, ஒக்டோபர் 23, நவம்பர் 13, டிசம்பர் 3 என எட்டு முறை தான், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டில் ஜனவரி 14, பெப்ரவரி 19 ஆகிய திகதிகளிலும் அதற்குப் பின்னர், தாக்குதல் நடந்த மறுநாளான ஏப்ரல் 22ஆம் திகதியுமே பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
அதிலும், கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகள் தேசிய பாதுகாப்புச் சபையிலும் எதிரொலித்திருக்கிறது.
குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு கடந்த டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு அழைப்பு விடப்படவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.
அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவும் ஒப்புக் கொண்டிருந்தார்.
பாதுகாப்பு இரகசியங்கள் வெளியே கசிய விடப்பட்டதால் தான், அவர்களை பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை என்று அரசாங்கத்தில் கூட அங்கம் வகிக்காத அவர் குறிப்பிட்டிருந்தார்.
தாக்குதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய பாதுகாப்பு சபையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் கசிந்ததால், அதனைக் கூட்டப்படவில்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் கூட்டம் கிரமமாக, வாரத்தில் இரண்டு முறை கூட்டப்பட்டது. வாரத்தில் ஒருமுறை ஜனாதிபதி அதில் பங்கேற்றார் ” என்றும் கூறப்பட்டிருந்தது.
சிசிர மெண்டிஸின் சாட்சியத்திலும் கூட, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு கூட்டம் தொடர்பான நாள் மற்றும் நேரம் பற்றிய தகவல் பாதுகாப்புச் செயலர் மூலம் அனுப்பப்படுவதே வழக்கம் என்றும், நவம்பர் 2018இற்குப் பின்னர், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் என்று தகவல் அளிக்கப்படுவதில்லை. சிறப்புக் கூட்டம் என்றே தகவல் அனுப்பப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.
தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இருந்து பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை ஒதுக்கி வைப்பதற்காகவே, திட்டமிட்டு காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
தேசிய பாதுகாப்பு சபையில் பேசப்படும் விடயங்கள் ஊடகங்களில் கசிந்ததை காரணம் காட்டி அவர்களை ஓரம்கட்டிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்புச் சபையை வினைத்திறனுடன் செயற்படுத்தியிருந்தால், தாக்குதல்களை தவிர்த்திருக்கலாம்.
அதைவிட, தேசிய பாதுகாப்பு சபையில் இந்த விவகாரம் பேசப்பட்டு அதுபற்றி ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டிருந்தால் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.
சிசிர மெண்டிஸின் சாட்சியம் வெளியானதும், புலனாய்வு அறிக்கை முன்கூட்டியே ஜனாதிபதிக்கு தெரியாது என்று மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தவறுகளை மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 4ஆம் திகதி கிடைத்த புலனாய்வுத் தகவல் சரியான முறையில் பாதுகாப்பு அதிகாரிகளாலும், அரசியல் மட்டங்களாலும், கவனத்தில் எடுக்கப்படாத நிலையில் தான், நாடு பேரழிவை சந்தித்திருக்கிறது.
இதற்கு அதிகாரிகள் மட்டத்தில் மாத்திரமன்றி அரசியல் மட்டத்திலும் தவறுகள் உள்ளன. அதனை தெரிவுக்குழு விசாரணைகள் அம்பலப்படுத்தும் என்றே தெரிகிறது,
அதேவேளை, தெரிவுக்குழு உறுப்பினர்களும் அரசியல் நோக்கில் செயற்பட முனைகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளையும் பாதுகாப்பு இரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சிகள் அலறத் தொடங்கியுள்ளன.
பொறுப்பான, எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும் விசாரணையை நடுநிலையுடன் முன்கொண்டு செல்ல உதவியிருக்க வேண்டும். வெளியே நின்று கத்துவதால் எந்த பயனுமில்லை.
அரசாங்கத்துக்கு எதிராக தாம் முன்னெடுத்த பிரசாரங்களை தெரிவுக்குழு சாட்சியங்கள் பொய்யாக்கி விடுமோ என்ற பயம் அவர்களுக்குத் தொற்றியிருக்கிறது. அது தான் அவர்களின் பிரச்சினை.
ஐ.தே.க தரப்புக்கோ இதனை வைத்து தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை துடைத்து விட்டு ஜனாதிபதியையும், மஹிந்த தரப்பையும் மாட்டி விடலாம் என்று பார்க்கின்றது .
தெரிவுக்குழு விசாரணையின் போக்கு தமக்கு சாதகமற்றது என்பதை ஜனாதிபதியும் உணருவதாகவே தெரிகிறது. அவரது ஊடகப் பிரிவின் அறிக்கையே அதற்குச் சாட்சி.
இத்தகைய நிலையில், தெரிவுக்குழு விசாரணைகள் பெரும் சர்ச்சையாகள ஏன் இன்னொரு அரசியல் குழப்பத்துக்குக் கூட, வழி வகுக்கக் கூடும் போலவே தெரிகிறது.