சூரிய குடும்பத்திற்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மொரட்டுவையில் அமைந்துள்ள ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இந்த விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சூரியனை விடவும் குறைவான பிரகாசத்தை கொண்ட நட்சத்திரமொன்றும், அதனை சூழ இரண்டு கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார்.
நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளானது, குறித்த நட்சத்திரத்தை 13 நாட்களில் சுற்றி வருவதாகவும், மற்றைய கோளானது நட்சத்திரத்தை 65 நாட்களில் சுற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
50 நாட்களுக்கு மேல் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் கோளொன்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விடயம் என சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான கோளொன்றை இலங்கை கண்டுபிடித்துள்ளமை பாரிய சவாலான விடயம் எனவும் கூறியிருந்தார்.
கோளொன்றை கண்டுபிடிக்கும் தொலைநோக்கியின் பெயரையே தாம் இந்த கோள்களுக்கு வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளுக்கு K2-310B எனவும், நட்சத்திரத்திற்கு சற்று தொலைவிலுள்ள கோளுக்கு K2-310C எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார்.
K2-310B கோளானது பூமியை விடவும் 2.7 மடங்கு (33165 KM) பெரியது என்பதுடன், அதன் வெப்பநிலை 263 பாகை செல்சியஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று, K2-310C கோளானது பூமியை விடவும் 2.7 மடங்கு (34,441 KM) பெரியது என்பதுடன், அதன் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள் மண்டலங்களை கண்டறியும் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கேப்லர் செயற்பாட்டு தரவுகளை பயன்படுத்தி இந்த ஆய்வு முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாசா நிறுவனத்தின் கேப்லர்-2 செயற்பாடுகளின் ஊடாக 5,88,991 நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டு, அவை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் ஊடாக 2018ஆம் EPIC 212737443 என்ற நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே, இந்த நட்சத்திரத்தை சூழ இரண்டு கோள்கள் சுழன்று வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக ஆத்தர் சீ கிளார்க் நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இந்த கோள் மண்டலம் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து மேலதிக விடயங்களை கண்டறிந்துக் கொள்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 11 விண்வெளி விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு ஆய்வு கண்காணிப்பாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.