பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான சோ.ராமசாமி (வயது 82) கடந்த 2 ஆண்டாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். நுரையீரல் பாதிப்பால் சுவாசிக்க முடியாமல் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்த அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பல முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொண்டையில் துளையிடப்பட்டு சுவாச பிரச்சினை சரி செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் (நவம்பர்) 29-ந்தேதி சோவின் உடல்நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு அவர் மீண்டும் சிரமப்பட்டார். இதனை தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு 4-வது மாடியில், அறை எண்.4006-ல் சேர்க்கப்பட்ட சோவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் சோவின் உடல்நிலை நேற்று இரவு கடுமையாக பாதிக்கப்பட்டது. அவரை காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் போராடினர். அது பலன் அளிக்கவில்லை. மாரடைப்பால் சோவின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது.
சோவின் உடல் சென்னை அடையாறு எம்.ஆர்.சி. நகர் வசந்தா அவென்யூவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல் – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மாலையில் அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு
பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, இல.கணேசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், நாசர், விசால், கார்த்தி, பொன்வண்ணன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து சோவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அவரது மகன் ஸ்ரீதர் இறுதிச்சடங்குகளை செய்தார். அதன்பின்னர் சோவின் உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.