கேரள மாநிலம் கொச்சியை அடுத்த திருவாங்குளம் பகுதியில்தான் அந்தத் தேசபக்த திருடன் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும். நேற்று முன்தினம் இரவு வரிசையாக ஐந்து கடைகளில் கைவரிசையைக் காட்டியுள்ள அந்தத் திருடன், ஆறாவதாக ஒரு வீட்டு பூட்டைத் திறந்து உள்ளே புகுந்திருக்கிறான்.
அது 4 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் அமைந்திருக்கும் பெரிய வீடு. அதனால் சுளையாக சிக்கலாமென ஆர்வமாக உள்ளே புகுந்து திருடனுக்கு, ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியைக் கைவிடாமல் தேடிய திருடனின் கண்களில் பட்டது சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த அந்தத் தொப்பி. அதைப் பார்த்த திருடனுக்கு ஷாக்!
காரணம் அது இராணுவ அதிகாரிகள் அணியும் தொப்பி. அடுத்த கணமே அவனது தேசபக்தி பீரிட்டு எழுந்து அவனது கைகளைக் கட்டிப் போட்டு விட்டது.
திருட்டு முயற்சியை உடனே கைவிட்ட திருடன், அங்கிருந்த சரக்கு பாட்டிலை எடுத்து ஒரு பெக் போட்டுவிட்டு கிளம்பி விட்டான்.
போவதற்கு முன்பு “இது ஒரு பட்டாளக்காரன் வீடு என்பது தெரியாமல் நுழைந்து விட்டேன். உள்ளே நுழைந்து தேடும்போது தொப்பியைப் பார்த்துத்தான் தெரிய வந்தது. பைபிளின் ஏழாவது கட்டளையை மீறிவிட்டேன். வீட்டின் பூட்டை உடைத்து விட்டேன், என்னை மன்னியுங்கள் பட்டாளத்து அதிகாரியே” என்று சுவரில் எழுதி வைத்துவிட்டு போயுள்ளான்.
அந்த வீடு ஐசக் மணி என்கிற இராணுவ கேணல் ஒருவருக்குச் சொந்தமானது.அவர் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை, திருடனது கைரேகை கிடைத்துள்ளதால் விரைவில் பிடிபடுவான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.