பிரான்ஸில் வரலாற்று பாட ஆசிரியர் ஒருவரை 18 வயதான மாணவன் தலை துண்டித்து கொலை செய்துள்ளான். பின்னர் பொலிசாரால் மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பாரிஸ் பிராந்தியத்தின் Val-d’Oise மாவட்டத்தில் நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது.
சாமுவேல் பி என்ற 47 வயதான ஆசிரியர் பாட வேளையில் முகம்மது நபி தொடர்பான கேலிச்சித்திரம் ஒன்றை வகுப்பில் காண்பித்ததால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய மாணவன், ஆசிரியரை பழிவாங்க இந்த கொலையை செய்துள்ளான்.
Éragny-sur-Oise (Val-d’Oise) நகர்ப்பகுதியில் ஆசிரியரை கழுத்தில் வெட்டிக் கொன்ற நபர் சடலத்துடன் நின்றவாறு கத்தியைக் காட்டி அந்த பகுதியில் நின்ற ஏனையோரையும் அச்சுறுத்தியுள்ளார். மாணவன் அண்டை நகரமான à Éragny (Val-d’Oise) பகுதியை சேர்ந்தவன்.
உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்த மாநகரப் பொலிஸார் ஆயுதங்களைக் கைவிடுமாறு அவரிடம் கோரினர். ஆனால் அதை ஏற்க மறுத்த தாக்குதலாளி அச்சுறுத்தியவாறு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அவரை சில நூறு மீற்றர் தொலைவில் விசேட படையினர் சுட்டுக் கொன்றனர்.
போயிஸ் டி ஆல்னே கல்லூரியில் வரலாற்றுப்பாட ஆசிரியர், அண்மையில் கருத்துச் சுதந்திரம் தொடர்பான பாட வேளை ஒன்றின்போது அவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு முகமது நபியை நிர்வாணமாக வரையப்பட்ட சில கேலிச் சித்திரங்களைக் காண்பித்து விளக்கமளித்திருந்தார்.
இது தொடர்பாக சில பெற்றோர்கள் தரப்பில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக கொலை நடந்தது.
மாணவன் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னதாக அல்லாஹூ அக்பர் என உரத்து சத்தமிட்டுள்ளான்.
ரஷ்யாவின் மொஸ்கோவில் பிறந்த செச்சனிய பின்னணியுடைய இஸ்லாமிய மாணவனே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். அதில் சிறுவன் ஒருவனும் உள்ளடக்கம்.
தாக்குத;தாரி, தாக்குதலுக்கு சற்று முன்னதாக மாலை 4:55 மணியளவில் தனது ருவிற்றரில் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளார். கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் படத்தை பதிவேற்றி, “காஃபிர்களின் தலைவரான மக்ரோனுக்கு, முஹம்மதுவை குறைகூறத் துணிந்த உங்கள் நரகங்களில் ஒன்றை நான் தூக்கிலிட்டேன்” என்று அவர் எழுதியுள்ளார். அவரது ருவிற்றர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஆசிரியரான சாமுவேலுக்கு எதிராக அந்த பகுதியில் கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு காண்பிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவியொருவர் வெளியிட்ட யூடியுப் வீடியோ இப்பொழுது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், வகுப்பறைக்கு வந்த ஆசிரியர், ஒரு படத்தை காண்பிக்கப் போவதாக கூறியதுடன், முஸ்லிம் மாணவர்களை கைகளை உயர்த்தும்படி கேட்டதாக கூறியுள்ளார்.
“நீங்கள் நிச்சயம் அதிர்ச்சியடைய கூடும். வெளியே செல்ல விரும்பினால் நீங்கள் செல்லாமென கூறினார். நான் செல்லவில்லை. அவர் நபிகள் நாயகத்தின் புகைப்படத்தை நிர்வாணமாகக் காட்டினார். உடைகள் இல்லாமல் வரையப்பட்டிருந்தது. நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். முஸ்லிம்கள் அல்லாதவர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர்” என்றார்.
இதையடுத்து வரலாற்று ஆசிரியரான சாமுவேல் பி மீது கோபத்தை வெளிப்படுத்த மாணவர்கள், பெற்றோர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தினர். அவரது முகவரி மற்றும் தொலைபேசி எண் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.