விரைவில் நடைபெறவுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷாலின் தரப்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவிற்கு, நடிகை ராதிகா நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தயாரிப்பாளர் எஸ்.தாணு அணி வெற்றி பெற்றது.
அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் ஏற்கனவே டி.ராஜேந்தர் மற்றும் டி.சிவா தலைமையில் 2 அணி போட்டியிடுகிறது.
சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நடிகர் விஷால் அதிரடியாக நீக்கப்பட்டார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையைக் குழைக்கும் வகையில் பேசியதாகவும், விதிமுறைகளுக்கு எதிராக பேட்டி அளித்தது குறித்தும் விளக்கம் அளிக்கக்கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியிருந்தது.
இதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விஷால் விளக்க கடிதம் அனுப்பினார்.
ஆனாலும், அவரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி விஷால் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில்தான், நடக்கவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என விஷால் அறிவித்துள்ளார்.
ஏனெனில், அவரை களம் இறக்குவதன் மூலம், தமிழ் சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர் சங்க தலைவரை உருவாக்குவோம் என பிரச்சாரத்தை விஷால் தரப்பு கையில் எடுக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், குஷ்புவிற்கு போட்டியாக இன்னொரு பெண் நின்றால் சரியாக இருக்கும் என நினைக்கும் எதிரணியினர், அதற்கு ராதிகாவே பொருத்தமான ஆள் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து அவரிடம் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு டீம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, நடிகர் சங்க தேர்தலை போல், தயாரிப்பாளர் சங்க தேர்தலும் களை கட்டும் எனத் தெரிகிறது.