நடிகர் விஷால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு வார பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடு குறித்து சில கருத்துக்களை கூறி விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு கடந்த 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘நடிகர் விஷால் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால், அவரை இடைநீக்கம் செய்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று கூறினார். இதற்கு விஷால் தரப்பு கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது அதில் ” மன்னிப்பு கேட்ட பின்னரும் தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விஷால் மீண்டும் விமர்சித்ததாகவும், அதனால் விஷால் மீதான சஸ்பெண்டை திரும்பப் பெற முடியாது” என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது.
இதன் பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை வருகிற 9 ம் தேதி ஒத்திவைத்தார்