இலங்கையின் அரசியல் என்பது எழுதப்பட்ட வரலாறு அல்ல அழிக்க முடியாத கல்வெட்டு. உலக அரசியலை விட தனக்கென தனி சிறப்பைக் கொண்டதும் இலங்கைதான். லட்சக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கு காரணமாக இருந்தும் இலங்கை அரசியல்தான்.
ஆனாலும் இன்றளவில் மைத்திரி எனும் தனி தலைமையைக் கொண்டு இலங்கையின் அரசியல் காய் நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தனியொரு தலைமையாக இன்னும் 3 வருடங்களுக்கு இலங்கையின் அரசியல் பயணத்தை கொண்டு செல்ல வேண்டிய கடமை மைத்திரிக்கு உண்டு.
இந்நிலையில் இவரின் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எதிர் காலத்தில் வெற்றிபெருமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.
ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு 99 வருடங்களுக்கு இலங்கை அரசாங்கம் விற்பனை செய்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஜனாதிபதி மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருந்தன.
மேலும் வட மாகாணத்தில் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாமை, குறிப்பாக தனி வீட்டுத்திட்டம் மக்களுக்கு வழங்கப்படாமை, ஜனாதிபதி மீதான மற்றுமொறு முறைப்பாடாக அமைந்தது.
வரவு செலவுத்திட்டத்தில் சிறுபான்மையின மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், என்று கூட்டு எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் மைத்திரிக்கு விழுந்த பேரிடியாக அமைந்தது.
இன்னும் மலையக மக்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை, உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படாமை, என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மைத்திரியின் மேல் விழுந்துள்ளன.
அதனையும் தாண்டி வெளிநாடுகளுடன் மைத்திரி கொண்டுள்ள உறவுகள் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எம் நாட்டின் தலைவர் மக்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்காமல் வெளிநாட்டு பயணங்களை மட்டும் மேற்கொள்வதனால் என்ன இலாபம் கிடைத்து விட போகின்றது என பலரும் பல்வேறான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
நாட்டு மக்களை மைத்திரியின் அரசாங்கம் ஏமாற்றி விட்டதாகவே கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் அமைந்திருந்தன. மேலும் மஹிந்தவின் குற்றச்சாட்டுக்களும் அவ்வப்போது தொடர்ந்த வண்ணமே உள்ளன.
கௌரவர்களின் சூதாட்டத்தில் சிக்கித்தவித்த யுதிஸ்டனின் நிலையைப் போலவே இன்று மைத்திரி பால சிறிசேனவின் நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வளவு தொடர் சவால்களையும் சாதிக்க வேண்டிய நிலைப்பாடு எமது ஜனாதிபதிக்கு உள்ளது.
இவற்றையெல்லாம் மாற்றியமைத்து வரலாற்றில் இடம் பிடிக்கும் நோக்கிலேயே மைத்திரியின் அரசியல் பயணமும் அமைந்துள்ளது.
எனினும் மக்கள் மத்தியில் தனியொரு தலைவனாக இருந்து சாதிப்பாரா? அல்லது அரசியல் காய் நகர்த்தல்களை தாங்க முடியாது மக்களை சமாளிப்பாரா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.