போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதம் உண்டு. மனைவி, மக்களுடன் வீடு, வாசல் என்று வாழும் வாழ்க்கை ‘போக வாழ்க்கை’ எனப்படும். சிவபெருமானும் கூட இந்த கோலத்தில் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக அருள் செய்கிறார்.
தீமைகளைப் போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேக வடிவமும் எடுக்கிறார். கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளைப் போக்குகிறார்.
மிக உயர்ந்த நிலை, ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி.
இந்த மூன்று கோலங்களையும் ஒன்றாக அருள்வதே நடராஜர் திருவுருவம். அதாவது, உல்லாசமாக தேவியுடனும், கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் இவர் ஆடுகிறார். இவரது ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு. இந்த நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்.