விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் காலிறுதிக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1,6-3 என்ற நேர் செட்டில் அஜ்லா டாம்ஜனவோவிச்சை (ஆஸ்திரேலியா) வெளியேற்றி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கரோலினா முச்சோவாவை (செக் குடியரசு) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சுவிட்சர்லாந்தின் விக்டோரியா கொலுபிக்கை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார்.
பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி கண்டார்.