சென்னையில் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உட்பட 6 இடங்களில் 144 தடை உத்தரவு நேற்று (சனிக்கிழமை) பிறப்பிக்கபட்டது. இதற்கமைய நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வந்த இந்த உத்தரவு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட இடங்களில் 4 பேருக்கு மேல் கூடினால் பொலிஸார் கைது செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மெரினாவில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறாத நிலையில் பொலிஸாரின் இந்த நடவடிக்கை தேவையற்றது என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக நிரந்தர சட்டம் கொண்டு வரக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17ஆம் திகதி முதல் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன்பயனாக தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது.
ஆனால், மாணவர்கள் நிரந்தர சட்டம் கொண்டு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் தெரிவித்தனர். மாணவர்களின் இந்த அமைதி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் தினமும் மெரினா கடற்கரைக்கு வந்து சென்றனர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் மெரினா கடற்கரையில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பொலிஸார் அப்புறப்படுத்தினர். அப்போது மாணவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது.
மீண்டும் மாணவர்கள் மெரினாவில் கூடுவார்கள் என்ற அச்சம் இருப்பதால் இந்த தடை உத்தரவை தமிழக அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுக்கு சென்னை மக்கள் அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்களின் தேவையற்ற சிரமங்களுக்கு மிகவும் வருந்துகிறோம் என பொலிஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.