தங்காலை − விதாரன்தெனிய பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த17ஆம் திகதி இரவு விதாரன்தெனிய பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்தவர் தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் சதுரங்க தில்ஷான் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த 15 பேர் கொண்ட குழுவினர், காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த காவல்துறை உத்தியோகத்தரும், அவரது சகோதரரும் வீட்டில் வைத்து தாக்கப்பட்டனர்.
பின்னர், சந்தேகநபர்கள் காவல்துறை உத்தியோகத்தரை அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் வெளிவந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த அவரது சகோதரர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.