உக்ரைனில் உள்ள முக்கிய உப்புச் சுரங்க நகரமான சொலேடரை ஒரு மாத காலப் போருக்குப் பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சொலேடர் நகரை கைப்பற்றியதன் மூலம் அருகிலுள்ள பெரிய நகரமான பக்மூட் நகருக்கான உக்ரைனிய விநியோக வழிகளை ரஷ்ய துருப்புக்கள் துண்டிக்க வழி ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்தக் களரியான நிலைமை
சொலேடர் நகரில் தனது படைகள் இன்னும் சண்டையிடுவதாகவும், ஒரே இரவில் தீவிரமான மோதல்கள் நடந்ததாகவும் உக்ரைன் கூறியிருந்தது.
சொலேடர் நகரைச் சுற்றி இடம்பெற்ற மோதல்களில் கடுமையான இரத்தக்களரியான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.
சொலேடர் நகரை தற்காக்கும் தாக்குதல்களில் உக்ரைன் படையினர் தைரியமாக ஈடுபட்டுவருவதாகவும் இது போரின் கடினமான கட்டம் எனவும் உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சொலேடர் நகரத்தில் 15 குழந்தைகள் உட்பட 559 பொதுமக்கள் நகரத்தில் தங்கியிருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற முடியவில்லை என்றும் பிராந்திய ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்திருந்தார்.
10 மாத தோல்விகளுக்கு பின் எட்டப்பட்ட வெற்றி
இந்த நிலையில் குறித்த நகரை தாம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, தமது தாக்குதல்கள் நடவடிக்கைகளில் இது முக்கியமான ஒன்றென குறிப்பிட்டுள்ளது.
இந்த நகரத்துக்கான முக்கியத்துவம் குறித்து இராணுவஆய்வாளர்கள் கேள்வி எழுப்பிய போதிலும் கடந்த 10 மாத காலப் போரில் பல தோல்விகளுக்கு பின்னர் எட்டப்பட்ட வெற்றியாக இது அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே சொலேடர் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கலாம் என கூறியுள்ள அமெரிக்க ஆய்வு நிறுவனம், எனினும் அவர்களால் பக்மூட் நகரை சுற்றிவளைக்க முடியும் என நம்பவில்லை எனவும் கூறியுள்ளது.