லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், சிறுநீரக சத்திரசிகிச்சை நடைபெற்று பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அதிகாரிகளிற்கு வலியுறுத்தியுள்ளது.
முடிவுகளை எடுப்பது நியாயமற்றது
“பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினர் குறித்தும் விரிவான பகுப்பாய்வு செய்யாமல் சம்பவம் குறித்து முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது நியாயமற்றது.” என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
“மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துவது அவசியம்” என்று வைத்தியர் விஜேசிங்க இதன்போது வலியுறுத்தினார்.
மருத்துவர்களின் அலட்சியம்
இதற்கிடையில், குழந்தை தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அடையாளம் கண்டு, இடது சிறுநீரகத்தை அகற்ற அறிவுறுத்திய மருத்துவர்களின் அலட்சியம் குழந்தையின் இறப்புக்கு காரணமாயுள்ளது என்று இறந்த குழந்தையின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் பின்னர் தெரிவித்தனர் என்றும் குழந்தையின் பெற்றோர் மேலும் கூறுகின்றனர்.
கிருமித் தொற்றால் குழந்தை இறந்தது
மேலும், எந்த சிறுநீரகமும் செயற்படாத குழந்தைக்கு, தகுந்த சிறுநீரகம் மாற்றப்படும் வரை, ஹீமோடையாலிசிஸ் தேவைப்படுவதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் துரதிர்ஷ்டவசமாக, கிருமித் தொற்றால் குழந்தை இறந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (28) நிகழ்ந்த இந்த இறப்பில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதனாலும், இவ்வாறான மருத்துவ பிழைகளால் ஏற்படும் உயிரிழப்புக்களிற்கு மன்னிப்பு வழங்க கூடாது பாரபட்சமின்றி விசாரணைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.