டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் (நவீன வரலாறு) பயின்று வரும் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் இன்று தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள முனிர்கா விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களிடம் உறங்க செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் வெகுநேரமாக அறையை தட்டியும் திறக்காததால், போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்த போது, முத்துக்கிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து முத்துக்கிருஷ்ணன் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைக்கு முன்னர் முத்துக்கிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமத்துவமில்லை என்று கடந்த 10-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் தந்தை கூறியதாவது,
முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று அவரது தந்தை ஜீவானந்தம் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசியபோது தேர்வை நன்றாக எழுதியிருப்பதாக முத்துக்கிருஷ்ணன் தெரிவித்திருந்ததாக ஜீவானந்தம் கூறினார். அடுத்த வாரம் ஊருக்கு வரவிருந்த நிலையில், தற்கொலை செய்தி தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.