ஆறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் மேதின நிகழ்வை நடாத்தவுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரசாங்க செயற்பாட்டுக் குழு, தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், சமூக விஞ்ஞான ஆய்வு மன்றம் ஆகிய ஆறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் திங்கட்கிழமை மாபெரும் மேதின நிகழ்வை நடாத்தவுள்ளன.
காலை- 09.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகும். கந்தர்மடம் ஆத்தி சூடி வீதி, பலாலி வீதியூடாகப் பல்கலைக்கழக முன்றலைப் பேரணி சென்றடையும். அதன் பின்னர் பல்கலைக்கழக முன்றலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.தங்கராஜா தலைமையில் மேதினக் கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் தலைவர்களின் உரைகள் இடம்பெறும்.
தேசம், இறைமை, சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வினை முன்வை,
வட-கிழக்குத் தமிழ்மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்பதை அங்கீகரி,
அரசியல் கைதிகளை விடுதலை செய்!,
காணாமல் போனோருக்கு நீதி வழங்கு,
மக்களிடம் பறித்த அனைத்து நிலங்களையும் உடனடியாகக் கையளி உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாபெரும் மேதின நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் உழைக்கும் மக்கள், தமிழ்த் தேசிய சக்திகள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.