கனடா நாட்டில் உணவு மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் 1,200 பன்றிகள் உயிரிழந்தது தொடர்பாக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Langton நகரில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நகருக்கு அருகில் 27 வயதான நபர் ஒருவர் பண்ணை வைத்து பன்றி மற்றும் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் சுகாதார துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு உணவு அளிப்பதில்லை என்றும், அடிப்படை வசதிகள் இல்லாமல் சுகாதாரம் சீரழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தகவலை பெற்ற அதிகாரிகள் பண்ணையை அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.
அப்போது, பண்ணைக்குள் ஏராளமான பன்றிகள் உயிரிழந்து கிடந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பண்ணையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாகவும் இருந்துள்ளது.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் பன்றிகளுக்கு பல நாட்கள் உணவு அளிக்காமல் இருந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஒரே பண்ணையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,265 பன்றிகள் உயிரிழந்துள்ளன.
இது குறித்து அதிகாரி ஒருவர் பேசியபோது ‘எனது 20 வருட அனுபவத்தில் இப்படி ஒரு மோசமான சம்பவத்தை பார்த்தில்லை’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.