சென்னையில் முரசொலி பவளவிழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் கமல் பேசியதாவது:
ரஜினி இந்த விழாவிற்கு வருகிறாரா என்று ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம் வருகிறார் என்றார் ஸ்டாலின். அவரும் பேசுகிறாரா என்றேன். இல்லை, மேடைக்கு கீழே அமர்ந்து பார்வையாளராக இருப்பதாக சொல்லிவிட்டார் என்றார். அப்படியானால் நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றேன். எதுவும் சொல்லவந்தால் கையை பிடித்து இழுத்துக்கொள்வார் ரஜினி என்ற தைரியம் இருந்தது.
விழாவுக்கு அழைத்துவிட்டு ஸ்டாலின் சென்றபிறகு கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன். அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய். இந்த விழா எப்படிப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள் என்றது. தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
அந்த மேடையில் அமர்ந்து கழகத்தில் சேரப்போகிறீர்களா என்று டுவிட்டரில் கேள்வி கேட்கிறார்கள். சேருவதாக இருந்தால் 1983ல் கலைஞர் டெலகிராம் மூலம் அழைப்பு விடுத்தபோதே சேர்ந்திருப்பேன். கலைஞரின் பெருந்தன்மை என்னவென்றால் அதன்பிறகு இதுவரையிலும் அதுபற்றி கேட்கவில்லை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.
விகடன் பா.சீனிவாசன் பேசும்போது பூனூல் பத்திரிகை என்று கலைஞர் விமர்சனம் செய்ததை சொன்னார். அவரே இந்த விழாவுக்கு மகிழ்வோடு வந்திருக்கும்போது பூனூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? ஏன் இப்படி பதறுகிறீர்கள்? அரசியல் பற்று விமர்சனம் செய்வீர்களா என்றால் அதற்கு இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா?
இது ஒரு பத்திரிக்கையின் வெற்றி விழா. அரசியல் விமர்சனம் செய்ய இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா. வெவ்வேறு கருத்துடையவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்துள்ளேன்.
இதோடு முடிந்தது திராவிடம் என்று பேசி வருகிறார்கள். தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும். திராவிடம் என்பது நாடு தழுவியது.
திராவிடம் என்பது தமிழகம் தென்னகத்தோடு முடிந்தது அல்லது தொல்லியல் துறையின் படி அது நாடு தழுவியது. சிந்துசமவெளி தொடங்கி தற்போது தென்னகத்தோடு சுருங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.