ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமல் போனோர் தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1981ஆம் ஆண்டில் கொஸ்தாரிக்கா நாட்டில், கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பு இவ்வாறானதொரு தினம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என யோசனையை முன்வைத்திருந்தனர்.
இதையடுத்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபை காணாமல் போனவர்களை பாதுகாப்பது தொடர்பான பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இனங்காணப்படாத பகுதிகளில் தடுத்து வைத்தல், உறவினர்களுக்கு தெரியாமலோ, சட்ட ரீதியிலான காரணங்களுக்காகவோ கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்கள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் இந்த தினம் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் இலங்கையிலும் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் ஏராளமானவர்கள். இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்று கூட தெரியாமல் இன்று வரை தேடி வருகின்றனர் அவர்களது உறவினர்கள்.
இதற்காக நாள்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, மாதங்களைக் கடந்து வடக்கு மற்றும் கிழக்கில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் என பல முயற்சிகளை முன்னெடுத்த போதும் இவர்களுக்கு இன்று வரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
போராட்ட இடத்திற்கு வரும் அரசியல் தலைவர்களும், தமிழ் தலைமைகளும் தீர்வினை பெற்றுத் jருவதாக கூறி விட்டு சென்றாலும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுத்தபாடில்லை.
அந்த வகையில் இன்று முன்னெடுக்கப்படும் சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.