கடந்த 2015.05.08ஆம் திகதியிலிருந்து 2015.05.12ஆம் திகதி வரை எனது கணவர் என்னுடன் கொழும்பில் இருந்தார் என வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவி மகாலட்சுமி மன்றில் சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வழக்கின் எதிரி தரப்பு சாட்சியங்கள் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று நடைபெற்றன.
இதன்போதே வழக்கின் ஒன்பதாவது எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் சார்பில் அவரது மனைவி இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
நான் சசிகுமாரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். எமது திருமண வாழ்க்கை நன்றாகவே இருந்தது. அவர் வருடத்திற்கு ஒருமுறை நாட்டிற்கு வருவார். அவ்வாறு தான் 2015.04.05 அன்று இலங்கை வந்தார்.
இந்த நிலையில் 2015.05.08 அன்றிலிருந்து 2015.08.12 வரை, எனது கணவர் என்னுடன் வெள்ளவத்தையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.
சசிந்திரன், துசாந்தன், சுவிஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.” என தெரிவித்திருந்தார்.
இதன்போது, சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் அவரை குறுக்கு விசாரணை செய்த போது,
2015.05.08 அன்றிலிருந்து 2015.08.12 வரை உங்கள் கணவர் உங்களுடன் இருந்தமைக்கு சாட்சியம் இருக்கின்றதா? என்று கேட்டார். அதற்கு சுவிஸ்குமாரின் மனைவி “இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிரி தரப்புச் சாட்சியங்கள் நேற்று நிறைவு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு தொகுப்புரைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வழக்குத் தொடுநர் தரப்பும், எதிரி தரப்பும் வாய்மொழி மூல மற்றும் எழுத்து மூல தொகுப்புரையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.