வட கொரிய ஜனாதிபதியான கிம் யோங் அன் தனது தங்கைக்கு ஆட்சியில் உயரிய பதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரியா ஜனாதிபதியான கிம் யோங் அன்னிற்கு கிம் யோ ஜோங் என்ற 30 வயது தங்கை இருக்கின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதியின் கொள்கை பரப்பு செயலாராக மட்டுமின்றி அவருடைய தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும் அவரது தங்கை செயற்பட்டு வந்துள்ளார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் கிம் யோங் அன் பங்கேற்றபோது இசை கலைஞர் ஒருவர் வைத்திருந்த கிடார் கருவி கிம் யோங் அன்னின் முகத்தில் அடிப்பது போல் பாய்ந்து தவறியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாததால் தான் இதுபோன்ற தவறு ஏற்பட்டுள்ளது என கண்டித்த கிம் யோங் அன் தனது தங்கையின் அனைத்து பதவிகளையும் பறித்தார்.
இரண்டு ஆண்டுகளாக எவ்வித அரசு பதவியும் இன்றி அவரது தங்கை வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் நிகழ்ந்த முக்கிய கூட்டம் ஒன்றில் பல அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இந்த வரிசையில் ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியின் தங்கைக்கு தற்போது அதிகாரம் படைத்த உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய ஆட்சியில் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் குழுவிற்கு ஜனாதிபதி தங்கை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல், அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பை அரக்கத்தனமான ஜனாதிபதி என கடுமையாக விமர்சனம் செய்த வட கொரியாவின் ஐ.நா சபை தூதராக பதவி வகித்த ரி யோங் ஹோ என்பவருக்கும் உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.