ஜேர்மனி நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(08) நள்ளிரவு குடும்பமாக திருட சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Cologne நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது…
11 வயது மகன் மற்றும் மனைவியை காவலுக்கு வைத்துவிட்டு வங்கியில் கொள்ளையடிக்க தந்தை ஒருவர் முயன்றுள்ளார்.
இந்நிலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 குறித்த வங்கிக்கு வெளியே பெண் ஒருவரும் ஒரு சிறுவனும் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் இரும்பை உருக்கியது போல துர்நாற்றமும் வீசியதாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவலை பெற்ற பொலிசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
வங்கிக்கு வெளியே நின்றுக்கொண்டு இருந்த 27 வயதான பெண்ணிடம் விசாரணை செய்துள்ளனர்.
அப்போது, எனது கணவர் இந்த இடத்தில் எங்களை சந்திப்பதாக கூறியுள்ளார்.அவர் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
சந்தேகம் அடைந்த பொலிசார் அருகில் நின்றுக்கொண்டு இருந்த 11 வயது சிறுவனின் தொலைபேசியை பரிசோதனை செய்துள்ளனர்.
அதில் சற்று முன்னர் அவரது தந்தை அனுப்பிய குறுஞ்செய்தி இருந்துள்ளது.
வங்கிக்குள் சிரமப்பட்டு வந்துவிட்டேன். நீங்கள் இருவரும் தீவிர கண்காணிப்பில் இருங்கள்’ என தந்தை எச்சரிக்கை விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம், தந்தை வங்கிக்குள் நுழைந்துள்ளதும் குடும்பமே இக்கொள்ளை திட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மோப்ப நாய் உதவியுடன் பொலிசார் தந்தையை கைது செய்துள்ளனர்.
இருவரின் மீது விசாரணை நடந்து வரும் நிலையில், 11 வயது சிறுவனின் நடவடிக்கை தொடர்பாக சீர்திருத்த பள்ளிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.