இந்த உலகில் மனிதன் படைக்காததென்று எதுவும் இல்லை. இறைவனால் மட்டுமே படைக்க முடியும் என நாம் நினைத்த உயிரையும் கூட படைத்துவிட்டான்.
ஆனால் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் மனிதனில் ஊறிக்கிடக்கின்ற சாதி, மதம், மூட நம்பிக்கைகள், ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள விசித்திர சட்டங்கள் என்பன மாறுவதில்லை.
பெற்றோர்கள் மதம் மாறி திருமணம் செய்துக்கொண்டதால் அந்த நாட்டில் இடம் இல்லாமல், வேறு நாட்டிலும் இடம் கிடைக்காமல் உலக மனிதர்கள் பட்டியலிலே இவரின் பேர் இல்லாமல் இருந்த ஒரு பெண்ணைப் பற்றி அறிந்துள்ளீர்களா?
அவர் தான் மஹா மாமோ. இவர் லெபனானில் கிறிஸ்த்துவ அப்பாவிற்கும் முஸ்லிம் அம்மாவிற்கும் மகளாக பிறந்தவர்.
அவர்கள் இருவரும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். சிரியாவில் மதம் மாறி செய்யும் திருமணங்களைப் பதிவு செய்ய முடியாது. திருமணம் பதிவு செய்யாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சிரியா குடியுரிமை வழங்காது.
இதனால் அவர் பெற்றோர் லெபனானுக்குச் சென்றார்கள். மஹா லெபனானில் பிறந்தார். லெபனானில் பிறந்தாலும், அவரின் அப்பா, அம்மா சிரிய குடிமக்கள் என்பதால் மஹாவுக்கு லெபனானிலும் குடியுரிமை கிடையாது.
நாட்டைவிட்டு வெளியேறலாம் என்றாலும், அதற்கு கடவுச்சீட்டு வேண்டும். தேசமே இல்லாதவர்க்கு எந்த தேசத்தின் கடவுச்சீட்டு கிடைக்கும்?
இவர் பாடசாலை காலங்களில் மிகச் சிறந்த கூடைப்பந்து வீராங்கனை.
தேசிய அணியில் இடம்பெறும் முழுத் தகுதி வாய்ந்தவர். ஆனால், தேசமே மறுக்கப்பட்டவருக்கு தேசிய அணியில் எப்படி இடம் கிடைக்கும்?
மருத்துவமனைக்குச் செல்ல, அலுவலகம் செல்ல, வாகனம் ஓட்ட, வண்டி வாங்க, வீடு வாடகைக்கு எடுக்க, ஹோட்டலில் அறை ஒன்றினை எடுக்க, தனக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க இப்படி எதற்கும் அவருக்கு அனுமதி கிடையாது. காரணம் அவர் இந்த உலகில் இருப்பதற்கான அத்தாட்சி அவரிடம் இல்லை.
கல்லுாரி வரை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்ட மஹா தனது 20 ஆவது வயதில் தனக்கான ஒரு தேசம் வேண்டுமென்று விரும்பினார்.
அனைத்து உலக தூதரங்களிலும் தன் நிலையை விளக்கி, தனக்கான குடியுரிமையைக் கோரினார்.
குறைந்தபட்சம் அகதி அடையாளம் கூட அவருக்கு எந்த நாட்டிலும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து 7 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு ஒரு தேசம், ஒரேயொரு தேசம் அவரை ஏற்றுக்கொள்ள முன்வந்தது.
அது தான் பிரேசில். பிரேசில் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்தமையின் பின்பு லெபனான் அரசு மஹாவை அடுத்த 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.
மஹாவும், அவரது தம்பி எட்டியும் (Eddie) பிரேசிலுக்கு கிளம்ப முடிவு செய்தார்கள்.
பயண ஏற்பாடுகளை கவனிக்கலானார்கள். ஆனால், அங்கு எங்கு போவது, என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
இதனால் மஹா தன் முகப்புத்தகத்தில் தன் நிலமையை விளக்கி உதவி செய்யுமாறு பதிவிட்டுள்ளார்.
லெபனானிலிருந்து கிளம்பும் வரை அவருக்கு எந்தப் பதிலும் வரவில்லை. லெபனானிலும் அவரால் நீடித்திருக்க முடியாது.
எனினும் ஏதோவோர் நம்பிக்கையில் விமானம் ஏறினார். பிரேசில் விமான நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரின் முகப்புத்தக பதிவுக்கு எமிலின் என்பவர் பதில் அளித்திருந்தார். எமிலின் விமான நிலையத்தில் மஹாவுக்காக காத்திருந்தார்.
தன்னோடு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் வீட்டிலேயே தங்க இடமளித்து அவருக்கு ஒரு தோட்டத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்தார்.
தன் தம்பியோடு பிரேசிலில் அகதி என்ற அடையாளத்தை பெருமையாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழத் தொடங்கினார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
மஹாவின் தம்பி எட்டி ஒரு கைக் கடிகாரத்திற்காகவும், சில நூறு ரூபாய்களுக்காகவும் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தனிமை படுத்தப்பட்ட மஹாவின் அகதி வாழ்க்கை அவருக்கு ஆதரவற்ற வாழ்க்கையாகவும் மாறிப் போனது.
மிகவும் மன வேதனைப்பட்ட மஹா வைராக்கியத்துடன் தோட்ட வேலைகளைப் பார்த்தவாறே கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிங் குறித்தும் படிக்கத் தொடங்கினார்.
மிக விரைவிலேயே அதில் தேர்ந்தவராகி தானே ஒரு புது “ஆப்” ஐ (APP) உருவாக்கினார். அது அகதிகளுக்கு ஆதரவு அளிக்க விரும்பும் நபர்களை, அகதிகளோடு இணைக்கும் ஒரு பாலமாக அமைந்தது.
மஹா உருவாக்கிய அந்த செயலி கூகுள் நிறுவனம் நடத்திய ஒரு போட்டியில் விருது வென்றது. “ஹோம் ஃபார் ஹோப்” (Home For Hope) என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தச் செயலியை இன்னும் மேம்படுத்தி விரைவிலேயே வெளியிடுவதாக சொல்லியிருக்கிறது கூகுள் நிறுவனம்.
தன் வாழ்க்கைக்கான பெரும் வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் தான் அமைத்துக் கொடுத்தன என்று சொல்லும் மஹா மூன்று வருடங்கள் கழித்து இப்போது தன் அம்மாவோடு சேர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.