ஸ்பெய்னில் இருந்து கட்டலோனியா சுதந்திரம் பெற வேண்டும் என போராடிவரும் இரண்டு தலைவர்கள் சிறைவைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனாவில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பிணை வழங்காமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள இருவரும், பிரிவினையை தூண்டுகின்றமை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்பெய்னில் இருந்து கட்டலோனியா பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதில் கைது செய்யப்பட்ட இரண்டு தலைவர்களும் முன்னின்று செயற்பட்டிருந்தனர்.
எனினும் இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெய்னின் மத்திய அரசாங்கம் கூறியிருந்ததுடன்,அதற்கு ஆதரவாக இந்த வாக்கெடுப்பு செல்லுபடி அற்றது என அரசியலமைப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்கு முன்னதாக சுதந்திரத்திற்கான சர்வஜென வாக்கெடுப்பை நடத்தும் வகையில் கட்டலோனிய பிராந்திய அரசாங்கம் கொண்டுவந்த சட்டம், அரசியலமைப்புக்கு முரணானது என அரசியலமைப்பு நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்திருந்தது.
எனினும் நீதிமன்ற தீர்ப்போ தலைவர்களின் சிறைவைப்போ கட்டலோனியா சுதந்திரம் பெறுவதை நிறுத்தாது என கட்டலோனிய பிராந்திய அரசாங்கத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.