வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சியை எவராலும் பிளவுபடுத்தவோ உடைக்கவோ முடியாது எனவும் இரா.சம்பந்தன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கூட்டமைப் பின் ஒற்றுமை, அதன் பலம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படும் எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
நாட்டில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். அதனை வென்றெடுக்கும் வரை எமது மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் தொடரும். புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவால் அரசமைப்புச் சபையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது இடைக்கால அறிக்கையே.
இது இறுதி வரைபு அல்ல.
இறுதி வரைபு வரும்வரை அதற்கான ஒத்துழைப்புகளை நாம் வழங்குவோம்.
புதிய அரசமைப்புக்கான இறுதி வரைபு தமிழ்பேசும் மக்களுக்கு உகந்ததாக இல்லை என்றால் அந்த இறுதி வரைபை நாம் அடியோடு நிராகரிப்போம் என்றார்.