உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் தலைவர்கள் நாளை மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இதுவரையில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலேயே ஐக்கிய தேசிய கட்சியுடன் ஆசன பங்கீட்டு பேச்சுகளில் ஏறக்குறைய முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஏனைய சபைகளை பொறுத்தவரையில் பேச்சுகள் முடிவு பெறவில்லை எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைகளை, தமது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்டையில், மக்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகள், குறைவாக வாழும் சபைகள், கணிசமாக வாழும் சபைகள் என பிரித்துள்ளதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மக்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகள் மற்றும் குறைவாக வாழும் சபைகளை பொறுத்தவரையில் ஐ.தே.க.வுடன் கூட்டிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற அடிப்படையில் போட்டியிடுவதில் சிக்கல் கிடையாது என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.