எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுயேட்சையாகவே எதிர்கொள்ளவுள்ளதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து, சிறுபான்மைக் கட்சிகள் சில போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே, விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளதாக தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன் எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை தாங்கள் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
‘இது தாங்கள் சந்திக்கும் கன்னித் தேர்தல். ஆகையால், தமது பலத்தை நிரூபிக்க தாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் தங்களை நிச்சயமாக மக்கள் ஆதரிப்பார்கள் என்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.