மொறவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இம் மாதம் 12ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.முஹீத் நேற்று (3) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் மொறவௌ பகுதியில் உள்ள பதினாறு வயதுடைய சிறுமியை தொலைபேசி மூலமாக அறிமுகமாகி காதலித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் வீட்டாருக்கு தெரியாமல் அவரை திவுலப்பிட்டிய பகுதிக்குச் அழைத்துச் சென்று தனிமையில், வீடொன்றில் ஒரு மாதகாலமாக வாழ்ந்துள்ளார்.
பின்பு சிறுமியின் பெற்றோர் மொறவௌ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து மொறவௌ பொலிஸார் திவுலப்பிட்டிய பொலிஸாருடன் இணைந்து, சந்தேகநபரையும் சிறுமியையும் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்துள்ளதாகவும், சிறுமியை மருத்துவ அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.