சிரியாவில் நடந்து வரும் போர் தாக்குதலில் வடகொரியா ரசாயன ஆயுதங்கள் கொடுத்து உதவியதாக ஐ.நா கூறியிருந்தது. இதற்கு வடகொரியா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் போர் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. அதிபர் பஷர் அல் ஆசாத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் இந்த போரில் இதுவரை 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தினமும் 5மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வந்தும், அதையும் சிரிய அரசே கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போர் நிறுத்த நேரத்திலும் தரைவழித்தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பெரும்பாலானோர் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை கண்டுபிடிக்கவே சில மணி நேரங்கள் ஆகிறது.
எனவே 5 மணி நேரம் என்பது போதுமானதாக இல்லை என மீட்புப்பணியில் ஈடுபடுவோர் மற்றும் மருத்துவ குழுவினர் கூறி வருகின்றனர்.
அதுபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுவதை சிரிய அரசே தடுத்து வருகிறது எனவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே, இந்த போரில் சிரியாவுக்கு ஏற்கனவே ரஷ்ய படைகள் உதவி வரும் நிலையில், வடகொரியாவும் நேரடியாக கெமிக்கல் குண்டுகள் கொடுத்ததாக ஐ.நா குற்றம் சாட்டியது. தற்போது இதற்கு வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
வடகொரியா தரப்பில், “ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதை எங்களது அரசு எதிர்த்து வருகிறது. சிரியாவுக்கு நாங்கள் ஆயுதங்கள் வழங்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது