மார்ச் 20 ஆம் திகதியான இன்று உலக சிட்டுக்குருவிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. அழிந்து வரும் பறவையினமான சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் மார்ச் 20 ஆம் திகதி உலக சிட்டுக்குருவி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இத்தினத்தை கடைபிடிக்கின்றன.
பறவை இனங்களிலேயே மிகச் சிறியதாகவும் அனைவரையும் கவரும் வகையில் ஒலி எழுப்பும் பறவை சிட்டுக்குருவி. மேலும் இவை புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த பறவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் சிட்டுக்குருவிகள் அதிகம் காணப்படும்.
நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள், சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும் அதிலுள்ள துளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை சிட்டுக்குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன.
ஆனால் தற்போது அவை பிளாஸ்டிக் பைகளில் பொதி செய்யப்படுவதால் சிட்டுக்குருவிகளுக்கு தேவையான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது.
அத்துடன் தற்போது நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அலைவரிசை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாக சிட்டுக்குருவிகள் அழியும் நிலை உருவாகியுள்ளது.
சிட்டுக் குருவிகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிய வழிவகை செய்வது நம் ஒவ்வொருவரினுடைய கடைமையாகும்.