யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான திருமதி ப.யோகேஸ்வரி, நேற்றுக் கன்னி உரையாற்றும்போது இருக்கையில் அமர்ந்து உரையாற்றினார். இதனை அவதானித்த முதல்வர் சபையின் கௌரவத்தைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்கள் எழுந்து நின்றே உரையாற்றுவார்கள்.
ஆனால் நீங்கள் இருந்தவாறு உரையாற்றியுள்ளீர்கள். சபையை அவமதிக்கும் வகையில் இவ்வாறான செயல்களை இனிவரும் காலங்களில் செய்யாதீர்கள்.
எழுந்து நின்று உரையாற்றும் முறையை முழு உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
பிரதி முதல்வரின் கன்னி உரை நிறைவடைந்த பின்னர் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கன்னியுரை ஆற்ற நேரம் ஒதுக்கப்பட்டது.
பின்னர் சபை ஒத்திவைக்கப்படும்போது உறுப்பினர் யோகேஸ்வரி, ”எனக்குக் காலில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
என்னால் நின்று உரையாற்ற முடியாது. எனவே இனிவரும் காலங்களிலும் இருந்தவாறு உரையாற்ற அனுமதி தரவேண்டும்” என்று சபை முதல்வரிடம் கோரினார்.
அதனை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இதேவேளை, சபைக்கு வரும்போதும் சபையைவிட்டு வெளியேறும் போதும் உறுப்பினர் யோகேஸ்வரி சகஜமாகவே நடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது.