தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனை கட்சிக்குள், குறுக்கு வழியால் முன்னிலைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் தமிழரசுக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மைய குழப்பங்களையடுத்து, இந்தவார இறுதியில் கூட்டப்படவிருந்த தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. அனேகமாக உடனடியாக அது கூட்டப்படும் சாத்தியமில்லையென தமிழரசுக்கட்சியின் முக்கிய எம்.பியொருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்க, தமிழரசுக்கட்சியின் ஒரு அணி அண்மையில் தீவிர முயற்சியெடுத்தது. ஈ.சரவணபவன் எம்.பிதான் இந்த நகர்வின் மூலவேராக இருந்தார்.
அண்மைக்காலமாக கட்சிக்குள் சுமந்திரன் அணி தலையெடுத்து, கட்சியை கட்டுப்படுத்துபவர்களாக மாறிவிட்டதில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரிற்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியுடனும், தமிழர்களுடனும் தொடர்புகள் ஏதுமற்ற அஸ்மின் போன்றவர்கள் கட்சியை பயன்படுத்தி தமது நலன்களை அடைந்து கொள்கிறார்கள், இதை சுமந்திரனும் அனுமதிக்கிறார், அப்படியான நடவடிக்கைகளாலேயே கட்சிக்கு சறுக்கல் ஏற்படுகிறது என அவர்கள் கருதுகிறார்கள்.
கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் யாழ் மாநகரசபைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பெரும் இடி விழுந்திருந்தது. வெற்றிபெற்ற ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரும் தமிழ் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில்- தமிழ் வாக்குகளாலேயே வெற்றிபெற்றிருந்தார்.
யாழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக தன்னை சொல்லிக்கொள்ளும் அஸ்மினிற்கு, அங்கும் ஆதரவில்லையென்பது வெளிப்பட்டு விட்டது. இந்தநிலையில் பொருத்தமானவர்களை முன்னிலைப்படுத்த வேண்டுமென்று மாவை சேனாதிராசாவிற்கு கூறியே, இளைஞரணி முன்னெடுப்புக்கள் நடத்தப்பட்டன.
தற்போதுள்ள தமிழரசுக்கட்சியின் கட்டமைப்புடன் தொடர்பில்லாமல் தனியாக செயற்பட திட்டமிட்டே, கலையமுதனை முன்னிலைப்படுத்தி இளைஞரணியை உருவாக்கும் பணிகள் ஆரம்பித்தன. மாவை மகன், தமிழரசுக்கட்சியின் பொருளாளர் கனகசபாபதி உள்ளிட்டவர்கள் கிழக்கிற்கும் சென்று வந்திருந்தார்கள். இதற்கான பணம், வாகன ஒழுங்கை சரவணபவன் எம்.பி செய்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் கடும் விமர்சனத்தை கிளப்பியதையடுத்து, தமிழரசுக்கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இம்மாதத்தின் முதல்வாரத்தில்- தமிழ் மக்கள் பேரவையின் இளைஞரணி மாநாட்டிற்கு முன்னதாக இளைஞரணி மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்த தமிழரசுக்கட்சி, இப்பொழுது இளைஞரணி மாநாட்டை யூலை மாதமளவில் நடத்துவதென தீர்மானித்துள்ளது.
மாவையின் மகனை இளைஞரணி தலைவராக்குவதென தமிழரசுக்கட்சியின் சில பிரமுகர்கள் தீர்மானித்திருந்த நிலையில், கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, மத்தியகுழுவின் இந்த தீர்மானத்தை முன்வைத்து ஒப்புதல் பெற்றே, நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனை கட்டுப்படுத்தும் தீர்மானமொன்றை கொண்டு வர ஈ.சரவணபவன், சி.சிறிதரன் தலைமையில் திட்டமொன்று தயாராகி வரும் விடயம் கசிந்து, அடுத்த புயலை கிளப்பியுள்ளது.
கட்சியாக தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் சுமந்திரன் தானே சிலவற்றை அறிவித்து விடுகிறார், இதுவும் கட்சியின் சரிவிற்கு காரணம் என கூறி, கட்சியாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் யாரும் வாய் திறக்க கூடாது என்பதே அந்த தீர்மானம்.
இந்த விடயம் கசிந்து, கட்சியின் உயர்மட்டத்திற்குள் ஏற்பட்ட குழப்பத்தையடுத்தே, மத்தியகுழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.