ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாகிய ஜனவரி 17 ஆம் தேதி, அதை முன்னிட்டு பேராவூரணியில் 20-வது ஆண்டாக முதியவர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த தங்கவேலனார்(70) பேராவூரணி பேருந்து நிலையம் அருகே தேநீர் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடை வாசலில் உள்ள பலகையில் தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருளையும் எழுதுவது வழக்கம். மேலும், அங்குள்ள குழந்தைகளுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுப்பார். இதனால் இவரை அப்பகுதி மக்கள் ‘திருக்குறள் தாத்தா’ என்று அழைப்பர். மேலும், அவரது முயற்சியினால் நிறைய குழந்தைகள் திருக்குறளை படிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி வருகிறார். அதன்படி, இன்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி, திருக்குறளின் பெருமைகளை விளக்கி வருகிறார். இன்றைய தினம் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவரது கடைக்கு டீ அருந்த வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும், திருக்குறள் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்து வருவதாக ‘திருக்குறள் தாத்தா’ தங்கவேலனார் கூறுகிறார்.