ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் பொறுப்பிலிருந்து சிறிகாந்தாவை இடைநிறுத்துவதென நேற்று முன்தினம் ரெலோ தலைமைக்குழு முடிவெடுத்த நிலையில், குறித்த கடிதம் நேற்ரையதினம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய சிறிகாந்தா, புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
இதில் ரெலோவின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் பலர் இணைந்து கொள்வார்கள் என தெரியவருகின்றது.
அத்துடன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாசும் ரெலோவின் புதிய கட்சியில் இணையலாமெனவும் கருதப்படுகிறது.
எனினும், எம்.கே.சிவாஜிலிங்கம் அந்த கட்சியில் இணையாமல், அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழமக்கள் சுயாட்சிக்கழகத்தில் இணைவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களமிறங்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் அவர்கள் களமிறங்வதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை, அடுத்த சில தினங்களில் என்.சிறிகாந்தா யாழில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அதில் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.